Saturday, May 18, 2024
Home » 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

by Ranjith

மாமல்லபுரம்: செங்கல்பட்டு – குன்னத்தூர் இடையே 14 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் அடுத்த அச்சரவாக்கம், பட்டிக்காடு, எடையூர், கடம்பாடி, மணமை ஆகிய கிராமங்கள் வழியாக குன்னத்தூர் வரை டி.28 தடம் எண் கொண்ட ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. மேலும், அந்த அரசு பேருந்து கடந்த 14 ஆண்டுக்கு முன்பு எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால், மேற்கண்ட கிராமங்களிலுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க நகர்ப்புறங்களுக்கு வந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக, அப்பகுதி மக்கள் போக்குவரத்துத்துறை அதிகாரிகளை பலர் நேரில் சந்தித்து மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே, 14 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம், பூஞ்சேரி சந்திப்பு, மணமை, குன்னத்தூர் வழியாக வெங்கப்பாக்கம் வரை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், ‘14 ஆண்டுக்கு முன்பு மேற்கண்ட கிராமங்கள் வழியாக டி.28 என்ற ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த பேருந்து, 14 ஆண்டுக்கு முன்பு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டதால் குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்கு சென்று சேர சிரமமாக உள்ளது என இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi