சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.3 கோடியில் மொபிஸ் இந்தியா பவுண்டேசன் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜூன் 5ம் தேதி தமிழ்நாட்டின் மிகப் பெரிய அடையாளமாக இருக்கிற, 16 மாதங்களுக்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்பு கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படுகிறது.
இது ரூ.230 கோடி மதிப்பில் கட்டப்பட்டு 15 அறுவை சிகிச்சை அரங்கங்கள், 1000 படுக்கைகள், 6,00,300 சதுர அடி பரப்பளவு கொண்டது. குடியரசு தலைவரை அழைத்து மருத்துவமனை, வருகிற ஜூன் திங்கள் 5ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கும் ரூ.10 கோடி நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசு தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் செவிலியர் பயிற்சி கல்லூரிகள் 5 என்கின்ற அளவிலேயே இருக்கிறது. ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் கடந்த 4 நாட்களுக்கு முன்னால் 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.