கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுடன், இன்று நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் வந்தார். ஆளுநரின் வருகை காரணமாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பகல் ஒரு மணிக்கே வத்தலக்குண்டு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாலை 5.45 மணி வரை இந்த தடை நீடித்தது. இதனால் மலைச்சாலையில் 5 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
* நெரிசலில் சிக்கிய ஆளுநர்
கொடைக்கானல் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஏரிச்சாலையை பார்வையிடுவதற்காக நேற்றிரவு 7 மணிக்கு கோஹினூர் மாளிகையிலிருந்து காரில் சென்றார். அப்சர்வேட்டரி பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். வழக்கமான வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்றதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். சிறிது நேரத்தில் போலீசார் போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்தனர்.