சென்னை: தென் மாவட்டங்களை திமுக அரசு வஞ்சிப்பதாக கூறுவதை விட்டுவிட்டு, புதுச்சேரி கவர்னர் பொறுப்பை மட்டும் தமிழிசை சவுந்தரராஜன் பார்த்தால் போதுமானது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக அரசு தென் மாவட்டங்களை வஞ்சிப்பதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்து தெரிவித்திருந்தார். இதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: முதலில் புதுச்சேரி கவர்னர் வேலையை அந்த அம்மாவை பார்க்க சொல்லுங்கள். பாஜ செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம். அவர்களுக்கு இருக்கிற பணியை பார்க்க சொல்லுங்கள். அவர்களுடைய எதிர்கால திட்டம் தமிழகத்தில் எங்கேயாவது நாடாளுமன்ற தொகுதியில் நின்று போட்டியிட வேண்டும். நிச்சயமாக எங்கே போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழ்நாடு மக்கள் தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். எனவே, புதுச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கான பணியை மட்டும் அவர் மேற்கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.