சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தளி ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் துவங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. அதேபோல், இன்று சட்டமன்றம் கூட்டப்பட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருந்தார். இறுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஓரிரு நிமிடங்கள் மட்டுமே உரையை நிகழ்த்தி அரசின் முழு உரையை புறக்கணித்தார். பிறகு சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் ரவியை திரும்பப்பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உரைக்கு முதலில் ஒப்புதல் தந்த பிறகு சட்டப்பேரவையில் வாசிக்க மாட்டேன் என்று ஆளுநர் நாடகம் ஆடியுள்ளார் என்று அவர் கூறினார்.
ஆளுநர் ரவி நடவடிக்கை: ஜவாஹிருல்லா கண்டனம்
சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியின் கண்ணியத்தை சிறுமைப்படுத்தி நடந்துகொண்டுள்ளார். மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை, ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.