சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க மாநில தலைவர் மதுரம், தேசிய தலைவர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமை செயலகம், அரசு அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகளில் அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமனத்தை தடுத்து தனியார் மயமாக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலேயே பணி நியமனங்கள் நடைபெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 12,526 ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் விடுதிகளில் துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். அதேபோல் காலியாக உள்ள விடுதி சமையலர் பணியிடத்தை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் நல விடுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். அங்கு காலியாக உள்ள சமையலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து பேரணியாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை சென்று, அங்கு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்லாயிரக்கணக்கோர் இதில் பற்கேற்பார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.