புதுடெல்லி: ‘ஒட்டுமொத்த இந்தியாவும் என் வீடு தான்’ என எம்பி ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் வயநாடு எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதனால், கடந்த 2004 முதல் கடந்த மார்ச் வரை டெல்லி துக்ளக் லேன் பகுதியில் வசித்து வந்த 12ம் எண் அரசு பங்களாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததால் ராகுலுக்கு எம்.பி பதவி மீண்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ராகுலுக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை மக்களவை செயலகம் நேற்று மீண்டும் ஒதுக்கியது. இதுகுறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘ஒட்டுமொத்த இந்தியாவும் என்னுடைய வீடு தான்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
*வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் எம்பி பதவி திரும்ப கிடைத்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதி காலியானது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் தன் ட்விட்டர் பதிவில், “2 நாள் பயணமாக வரும் 12, 13 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்கிறார். ஜனநாயகம் வென்றது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கான குரல் மீண்டும் ஒலிக்கிறது என்ற மகிழ்ச்சியில் அந்த தொகுதி மக்கள் இருக்கின்றனர். ராகுல் வயநாட்டு எம்பி மட்டுமல்ல. அவர்களின் குடும்ப உறுப்பினர்” என்று தெரிவித்துள்ளார்.