இம்பால்: மணிப்பூரின் பிஷ்னுபூரில் அசாம் ரைபிள் படையினர் திரும்ப பெறப்பட்டு, அதற்கு பதிலாக சிஆர்பிஎப், மாநில போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி நடந்த பழங்குடியினர் ஒற்றுமை யாத்திரையில் வன்முறை வெடித்தது. இதனால், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இனக் கலவரத்தால் பாதித்துள்ள மணிப்பூரில் இருந்து துணை ராணுவப் படையினரைத் திரும்ப பெற வலியுறுத்தி, இம்பால் மேற்கு மாவட்டத்தின் ஹோடாம் லெய்ராக், குவாகீதெல் மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் அங்கோம் லெய்காய், குராய் பகுதிகளில் பெண்கள் கடந்த திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில், மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பிஷ்னுபூர்-காங்க்வாய் சாலையில் மொய்ராங் லாம்காய் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் இருந்து அசாம் ரைபிள் படையினர் திரும்ப பெறப்படுவதாகவும் அவர்களுக்கு பதிலாக மாநில போலீசாரும் சிஆர்பிஎப். வீரர்களும் மறு அறிவிப்பு வரும் வரை, உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள், என்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் காலென் தெரிவித்தார்.