திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகம் சுற்றுலாவாக மூத்தகுடிமக்களை அழைத்து செல்லும் திட்டத்திற்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்ட 200பேர் சாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர் சோலை ஆகிய கோவில்களுக்கு 60 முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் 5 கட்டமாக ஆண்டிற்கு 1000 பேர் கட்டணம் இல்லாமல் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதன் முதற்கட்ட பயணம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி சென்னை கந்தகோட்டத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 207 மூத்தகுடிமக்கள் அறுபடை வீடுகளில் முருகனை தரிசித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன் பெரும் வகையில் 2ஆம் கட்ட பயணம் பழனி தண்டாயுதபாணி கோவிலிலிருந்து தொடங்கியது. பழனியில் முருகனை தரிசித்த பக்தர்கள் திருசெந்தூர் முருகனை கண்ணார கண்டு தரிசித்தனர். சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி அறுபடை வீடு முருகனை தரிசிக்க வைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பக்தர்கள் தொடர்ந்து திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமி மலைக்கு சென்றனர்.