Tuesday, May 21, 2024
Home » கோவையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய விவகாரம் அதிமுக எம்எல்ஏ, பாஜ மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய விவகாரம் அதிமுக எம்எல்ஏ, பாஜ மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

by MuthuKumar

சென்னை: கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம், பாஜ கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்த அரசு உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், கோவிந்தசாமியின் மனைவி அளித்த மனுவின் அடிப்படையில் பட்டா வழங்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்த நிலையில் அதை வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவரது வாரிசுகள் சிவராஜ், பாலாஜி, கிரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் நிறுவனம் ஆகியோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. மேலும், நிலத்தை மீட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமன் லால் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அங்கு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்தது என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், மற்றவர்களின் பெயருக்கு மாற்றி உள்ளனர். இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என்று விரிவாக விசாரிக்க வேண்டும். சட்டவிரோதமாக அரசு நிலத்தை அபகரித்து, மோசடியாக பெயர் மாற்றம் செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நில நிர்வாக ஆணையர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருந்தவர்கள், அதன்பின்னர் அவற்றில் கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது.

திட்டமிட்டு நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. பொது ஊழியர் என்கிற பெயரில் அரசு சொத்தை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை நிலத்தையும், கட்டிடத்தையும் மீட்டு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை நில நிர்வாக ஆணையர் நவம்பர் 4ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi