சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை:
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மதிக்காமல், போராட்ட காலங்களில் அவர்களை அழைத்துக் கூட பேசாமல், அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல், குறிப்பாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற ஒரு வார்த்தை கூட இடம் பெறாமல் திட்டமிட்டே தவிர்த்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.
சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறதே அன்றி நிராகரிக்கப்படவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். இது மிகுந்த நம்பிக்கையை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கரிசனை காட்டுவது போலவும், அவர்கள் மீது அக்கறை கொண்டவர் போலவும் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.