சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் 8,000 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு பேருந்துகளில் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணம் இல்லை என இருந்த நிலையில் இதை ஐந்து வயது வரை உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 5 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு அரசு பேருந்துகளில் பாதி கட்டணம் எனவும் அரசிதழில் வெளியாகியுள்ளது.