சென்னை: தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் உருவானதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், சில நாட்களுக்கு பிறகு சற்று குறைவதுமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.45,400க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் ரூ.45,240க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்கப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வருகிறது. இந்த நேரத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபாவளி நேரத்தில் தங்கம் விலை உயர்வு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.