ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 14ம் தேதி மீன் பிடிக்க சென்ற 15 மீனவர்கள், 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். 15 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (அக். 27) ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதனிடையே இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் தாலுகா தலைவர் கார்ல் மார்க்ஸ் தலைமையில் தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கட்சியினர் கைகளில் திருவோடு ஏந்தி மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி கோஷம் போட்டனர். செயலாளர் ரவிச்சந்திரன், ஆரோக்கிய மேரி உட்பட சாலை மறியலில் ஈடுபட்ட 22 பேரை தங்கச்சிமடம் போலீசார் கைது செய்தனர்.