அகமதுநகர்: தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் ஷீரடியில் நேற்றுமுன்தினம் நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில்,‘‘ ராமர் நம்முடையவர். அவர் பகுஜன் வகுப்பை சேர்ந்தவர். நம்மை போலவே அசைவம் சாப்பிடுபவர். காட்டில் இருக்கும் போது அவர் வேட்டையாடி உண்டார். நீங்கள்(பாஜ) எங்களை சைவ உணவை உண்ணச் சொல்லும் போது, நாங்கள் ராமரை பின்பற்றி ஆட்டிறைச்சி சாப்பிடுகிறோம்.
14 ஆண்டுகளாக காட்டில் இருந்த ராமருக்கு எப்படி சைவ சாப்பாடு கிடைத்திருக்கும்’’ என்றார். ஜிதேந்திர அவாத்தின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவாத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தானேயில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அவாத்தின் பேச்சு இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி பாஜ எம்எல்ஏ ராம் கதம் மும்பை,காட்கோபர் போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் கூறுகையில்,‘‘அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ளது. அதனை ஜீரணிக்க முடியாததால் ஜிதேந்திர அவாத் இதுபோன்று பேசுகிறார் என குற்றம் சாட்டினார். இதற்கிடையே தனது பேச்சுக்கு ஜிதேந்திர அவாத் நேற்று வருத்தம் தெரிவித்தார்.