*வனத்துக்குள் மீண்டும் விரட்டியடிப்பு
கோபி : கோபி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறி விளை நிலங்களுக்குள் சுற்றிய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக சிறுத்தை, யானை போன்றவை அதிகளவில் வசித்து வருகின்றன. வனபகுதியில் உள்ள யானைகள் உணவிற்காக அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வன எல்லையில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் உள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை உணவிற்காக பங்களாப் புதூர் வழியாக எருமைக்குட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்தது.
விளைநிலங்களுக்குள் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையை கண்ட அப்பகுதி விவசாயிகள் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த டி.என்.பாளையம் வனசரகர் மாரியப்பன் தலைமையில், வனவர் பழனிச்சாமி உள்ளிட்ட வனத்துறையினர் விளைநிலங்களுக்குள் புகுந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பட்டாசு வெடித்து யானையை வனபகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், ஒற்றை காட்டு யானை விவசாய நிலத்திற்குள் புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.