சென்னை: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நிறுவனமும் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பும் இணைந்து சர்வதேச வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் தாமோ அன்பரசன், இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
முதல்வரின் முன் மாதிரியான திட்டங்களால், ஸ்டார்ட் அப் தர வரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 3ம் நிலைக்கு முன்னேறி ‘லீடர் தகுதியை பெற்றுள்ளது. தமிழ்நாடு 2022-23ம் ஆண்டில், இந்தியாவின் ஏற்றுமதியில் 9 சதவீத பங்களிப்பை அளித்து, 40.68 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. தேசிய ஏற்றுமதி வளர்ச்சியில் 14 சதவீதத்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் ஆண்டுக்கு 16 சதவீத ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் நடத்தப்படும் இந்த வாங்குபவர் – விற்பனையாளர் சந்திப்பின் போது, 174 எம்எஸ்எம்இ நிறுவனங்களிடமிருந்து 50.70 லட்சம் அமெரிக்க டாலருக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 19.55 லட்சம் அமெரிக்க டாலர் 73 புதிய முதல்முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் இஸ்ரார் அகமது, தொழில் துறையின் அரசு செயலர் அருண்ராய், எம்எஸ்எம்இ துறையின் அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் தொழில் வணிக ஆணையர் கிரேஸ் பச்சோவ், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர்ஹபீப் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.