டெல்லி: உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்சநீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாததால் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும் என்றார்.
காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது;
உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்சநீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். தனி நீதிபதி தீர்ப்பில் தவறு இருந்தால் டிவிசன் அமர்வுதான் சரிசெய்யவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால் உச்சநீதிமன்றம் தலையிடவேண்டும் என தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபன்கர் அமர்வு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. உயர்நீதிமன்ற வழக்குகளின் ரோஸ்டர் விவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஸ்டர் அட்டவணையை பார்த்த பின்னர்தான் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.