கவுகாத்தி: அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம் பனிபூர் தேகேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனிப்பட்ட வேலைக்காக திப்ருகர் நகருக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த 17 முதல் 21 வயதுக்கு உட்பட 4 இளைஞர்கள் அந்த சிறுமியைக் கடத்திச் சென்றனர். அவர்கள் அந்த சிறுமியை மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, அன்றிரவு முழுவதும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். திப்ருகர் நகருக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே பனிப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், 4 பேர் கும்பல் சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது. அதையடுத்து சம்பந்தப்பட்ட 4 இளைஞர்களையும் கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா? என்து குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.