திருவொற்றியூர்: மாதவரத்தைச் சேர்ந்தவர்கள் குமார் (34), ராஜேஷ் (36), ரோஜா (50). இவர்கள் 3 பேரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்து வருகின்றனர். நேற்று காலை குமார், ராஜேஷ், ரோஜா ஆகியோர் 27வது வார்டில் உள்ள வீடுகளில் இருந்து குப்பையை சேகரித்தனர். பின்னர், அதை தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு சென்றபோது, குப்பையில் 3 சவரன் தங்கச்செயின் இருந்தது. அதை எடுத்து ஒப்பந்த நிறுவன மேலாளர் ராம்கியிடம் இதுகுறித்து தெரிவித்தனர். பின்னர் குப்பை வாங்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று செயின் ஏதாவது காணாமல் போனதா என்று விசாரித்தனர். அப்போது பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் வேலுச்சாமி (42) என்பவரது வீட்டில் குப்பையில் தவறுதலாக தங்கச் செயின் விழுந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மாதவரம் மண்டல உதவி ஆணையர் திருமுருகன், செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், சின்னதுரை ஆகியோர் முன்னிலையில் அந்தச் செயினை அதன் உரிமையாளரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதில் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களை அதிகாரிகள் பாராட்டினர்.