Thursday, May 30, 2024
Home » கோவில்பட்டி அருகே ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்தோம்: கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

கோவில்பட்டி அருகே ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்தோம்: கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

by Dhanush Kumar

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கன்டெய்னர் லாரியில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பதுக்கி கைது செய்யப்பட்ட டிரைவர், இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா மூட்டைகள் ஒரு கன்டெய்னர் லாரியில் எடுத்து வரப்படுவதாக தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடிக்கு கடத்தல் கும்பல் வரும் வழிகளான அருப்புக்கோட்டை – எட்டயபுரம் ரோடு, கோவில்பட்டி – இனாம் மணியாச்சி ரோடு, கயத்தாறு அருகே சாலைப்புதூர் டோல்கேட் ஆகிய 3 இடங்களில் எஸ்பி உத்தரவின் பேரில் தலா 3 எஸ்ஐக்கள் தலைமையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கயத்தாறு – சாலைப்புதூர் டோல்கேட்டில் வந்த கன்டெய்னர் லாரியை தனிப்படை எஸ்ஐக்கள் ரவிக்குமார், ராஜபிரபு, பிரெட்ரிக்ராஜன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் சோதனையிட்டனர். அப்போது அந்த கன்டெய்னர் லாரியில் ஒரு ரகசிய அறையில் தலா 2 கிலோ எடையில் 300 பிளாஸ்டிக் பை பார்சல்களில் 600 கிலோ கஞ்சா இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரி டிரைவர் புதுச்சேரி ஏனாம் பகுதியைச் சேர்ந்த சக்திபாபு (39), தூத்துக்குடி ஆராக்கியபுரத்தைச் சேர்ந்த மத போதகர் ஜான் அற்புத பாரத் (33), தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கன்டெய்னர் லாரி ஆகியவற்றை கோவில்பட்டி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். கைதான டிரைவர் சக்திபாபு போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: ஆந்திராவிலிருந்து 300 பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா மூடைகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்தேன். லாரியில் நான் மட்டுமே இருந்தேன். கோவில்பட்டி வழியாக கயத்தாறு வருவதற்கு முன்பே லாரியின் நம்பர் பிளேட்டை மாற்றினேன். இதற்கு முன்னர் இதுபோல் 2 முறை கஞ்சா மூடைகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளேன். ஆனால் இந்த முறை மதுரையிலிருந்தே என்னை போலீஸ் கண்காணிப்பதை உணர்ந்து கொண்டேன். இதையடுத்து என்னை அனுப்பிய லாரி உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தேன். உடனே அவர், தூத்துக்குடிக்கு செல்ல வேண்டாம், மீண்டும் ஆந்திராவுக்கே லாரியை ஓட்டி வருமாறு கூறிவிட்டார். அதன்படி மீண்டும் ‘யு டர்ன்’ அடித்து வந்த ரோட்டிலேயே மீண்டும் சென்றேன். அப்போது கயத்தாறு டோல்கேட்டில் வாகன சோதனை நடத்திய போலீசார் லாரியில் ஏறி பார்த்தனர். லாரி காலியாகவே இருக்கவே, போலீசார் இறங்கி விட்டனர். கஞ்சா மூடைகளை போலீசார் கண்டுபிடிக்காததால் நிம்மதியடைந்த நான், ஓனரை தொடர்பு கொண்டு மீண்டும் வேறு ரூட்டில் தூத்துக்குடி செல்வதற்கு அனுமதி கேட்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் லாரியில் ஏறிய போலீசார் கன்டெய்னர் ரகசிய அறையில் வைத்திருந்த கஞ்சா மூடைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்து என்னை பிடித்து விட்டனர். எனக்கு கஞ்சா கடத்தலில் உறுதுணையாக தூத்துக்குடியில் செயல்பட்ட ஜான் அற்புதராஜ், விஜயகுமார் ஆகியோரையும் கைது செய்தனர்.

நான் இதற்கு முன்னர் 2 முறை கஞ்சா மூடைகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளேன். அப்போது என்னுடைய ஓனர், ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அந்த இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு நிற்குமாறு போனில் கூறுவார். அதன்படி அவர் கூறிய காட்டுப்பகுதியில் லாரியை நிறுத்துவேன். அதன்பின்னர் தூத்துக்குடியிலிருந்து 2 பேர் வந்து அந்த லாரியை எடுத்துச் சென்று இறக்க வேண்டிய இடத்தில் கஞ்சா மூடைகளை இறக்கி விட்டு, தூத்துக்குடியில் ஒரு இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு எனது ஓனருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர் லாரி இருக்கும் இடத்தைக் கூறி அதை எடுத்து வரும்படி கூறுவார். அதன்படி தூத்துக்குடிக்கு சென்று அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆந்திராவுக்கு செல்வேன். நான் ஆந்திராவிலிருந்து கொண்டு வரும் கஞ்சா மூடைகள் தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கடத்தப்படும். இதில் எங்களுக்கு அதிக பணம் கிடைத்ததால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் இருந்தாலும் தொடர்ந்து ஈடுபட்டோம். ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தும் ‘நெட் வொர்க்’ கில் சமீபத்தில் பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் எங்களிடமிருந்து ஒருவர் பிரிந்து சென்று விட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் துல்லியமாக நாங்கள் லாரியில் பதுக்கியதை போலீசார் கண்டுபிடித்து எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi