Friday, May 17, 2024
Home » கஞ்சா வழக்கு..மக்களுக்கு சேவை புரியும் விசாரணை அதிகாரி நேர்மையாக நடக்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

கஞ்சா வழக்கு..மக்களுக்கு சேவை புரியும் விசாரணை அதிகாரி நேர்மையாக நடக்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

by Lavanya

மதுரை: தன் மீது பதியப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மதுரை அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணகுமார், கடந்த மார்ச் மாதம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக எஸ்.எஸ்.காலணி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் நடந்த இவரது ஜாமீன் வழக்கு விசாரணையின் போது, கிருஷ்ணகுமாரை 2019 வழக்கு ஒன்றில் கைது செய்ததும், அப்போது அவர் போலீஸாரால் தாக்கப்பட்டதுடன், அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளதும், இதனை எதிர்த்து கிருஷ்ணகுமார் தனிநபர் வழக்குப்பதிவு செய்ததும் தெரியவந்தது. இந்தநிலையில் இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு கிருஷ்ணகுமாரை போலீஸார் வற்புறுத்தியுள்ளனர். அவர் அதனை ஏற்க மறுத்ததால் கிருஷ்ணகுமார் மீது பொய்யாக கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் கிருஷ்ணகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதுடன், பொய் வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அப்போது உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தென்மண்டல ஐ.ஜி அஷ்ரா கார்க் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி இளந்திரையன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பேரரசி, அமலன், ஏட்டு நாகசுந்தர், காவலர்கள் பிரபாகரன், அசோக்குமார் ஆகியோர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதுடன், பொய் வழக்கும் பதிவு செய்துள்ளனர். தவறு செய்த இவர்கள் மீது மதுரை போலீஸ் கமிஷனர், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.ஆனால் உயர் அதிகாரிகள் வழக்கம் போல் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தன் மீது பதியப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை காவல் ஆய்வாளர் பூமிநாதன், எஸ்.ஐ. பேரரசி ஆகியோர் நேர்மையான நடத்தவில்லை என்றும் காவல்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகிறது எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார். மக்களுக்கு சேவை புரியும் விசாரணை அதிகாரி கீழ்படியாமல் இருந்ததோடு, மரியாதை குறைவாகவும் நடந்துள்ளார். மனுதாரர் மீது முன் விரோதம் காரணமாகவே இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது உறுதியாகிறது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். விசாரணை அதிகாரி இந்த வழக்கில் குற்றவியல் சட்டத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்தி உள்ளார். மேலும், கஞ்சா கடத்தியதாக பதியப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

five + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi