Saturday, May 11, 2024
Home » இறுதி ஊர்வலத்தின் போது மாலைகளை சாலைகளில் வீசினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

இறுதி ஊர்வலத்தின் போது மாலைகளை சாலைகளில் வீசினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

by Mahaprabhu

சென்னை: இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் மாலைகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன், கடந்த 2022 செப்டம்பர் 4ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் வீசப்பட்ட மாலைகளில் பைக்கை ஏற்றி வழுக்கி விழுந்து ஒருவர் பலியாகி விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கடிதத்தை மனுவாக ஏற்று, தாமாக முன்வந்து வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுத்து, தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டது.

இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், அனைத்து போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிகளுக்கு டி.ஜி.பி. கடந்த 20ம்தேதி அனுப்பிய சுற்றறிக்கையை தாக்கல் செய்தார். அதில், இறுதி ஊர்வலம் என்பது மக்களின் கலாசாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம். அதேநேரத்தில், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உறவினர்கள், இறுதி ஊர்வலம் எப்போது? எந்த வழியாக செல்லும் என்பதை முன்கூட்டியே காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்படி, ஊர்வலம் செல்லும் வழியில் போக்குவரத்து சரி செய்து கொடுக்கப்படும். இறுதி ஊர்வலத்தின்போது, அதிக அளவில் மாலைகள், மலர்வலையங்களை சாலைகளில் வீசக்கூடாது.

அதை மீறி சாலைகளில் வீசப்பட்டால், உள்ளூர் போலீசார், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முறையான அனுமதியில்லாமல், மரண அறிவிப்பு விளம்பர பலகை, பேனர்கள் வைக்கக்கூடாது. நெடுஞ்சாலை, பிரதான சாலைகள், உயர்மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலத்தை நடத்துவதை உறவினர்கள் தவிர்க்கவேண்டும். போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நிபந்தனைகளை யாரும் மீறக்கூடாது. மீறினால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிபதிகள், டி.ஜி.பி. சுற்றறிக்கை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று நம்புவதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi