Saturday, July 27, 2024
Home » உல்லாச வீடியோவை வெளியிடுவதாக கூறி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ரூ.2.70 லட்சம் பறித்த காதலி

உல்லாச வீடியோவை வெளியிடுவதாக கூறி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ரூ.2.70 லட்சம் பறித்த காதலி

by Mahaprabhu

மயிலாடுதுறை: தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் ரூ.2.70 லட்சம் பறித்த காதலி மற்றும் உடந்தையாக இருந்த மூமுக நிர்வாகி உள்பட 4 பேரை மயிலாடுதுறை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). காரைக்காலில் மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த இவருக்கு, மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் கடந்த 6 மாதமாக காரைக்காலுக்கு சுபாஷினி சென்று வந்தார். அப்போது தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி வெங்கடேசனிடம், சுபாஷினி அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி இருவரும் தனிமையில் இருந்ததை வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி செல்போனில் வீடியோ எடுத்து வைத்ததோடு, அவரிடமிருந்து பெரிய அளவில் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 29ம்தேதி மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு அவரை சுபாஷினி வரவழைத்தார். தனியார் விடுதிக்கு வெங்கடேசன் வந்ததும், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் (40) என்பவருக்கு தகவல் தெரிவித்து சுபாஷினி வரவழைத்தார். அவருடன் அவரது கூட்டாளிகளான முகமது நசீர்(39), தினேஷ் பாபு(31) ஆகியோர் வந்தனர். இதில் அனைவரும் சேர்ந்து, ‘நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடு, இல்லாவிட்டால் சுபாஷினியுடன் நீ ஒன்றாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவோம்’ என வெங்கடேசனை மிரட்டினர்.

பின்னர் அவரிடம் இருந்து ரூ.2.70 லட்சத்தை பிரகாஷ், சுபாஷினி ஆகியோர் பறித்தனர். மேலும் வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் வெங்கடேசன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கில்லி பிரகாஷ், சுபாஷினி, முகமது நசீர், தினேஷ்பாபு ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011ம் ஆண்டு முதல் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

17 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi