கள்ளக்குறிச்சி: செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூர் அருகே உள்ள பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் மோகன் (55). இவர், ஊரப்பாக்கத்தில் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி நடத்தி வந்தார். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் அவருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி மாலையில் மோகன் தனது மனைவியிடம் வேலூர் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார்.
ஆனால் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கு சேலம் சாலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதன் பிறகு மோகன் அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.