தூத்துக்குடி: ஆணாக மாறிய தோழியிடம் இருந்து பிரித்ததால் தூத்துக்குடி பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி ஸ்பிக்நகரை சேர்ந்தவர் ஹரிப்பிரியா(28), தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்தான நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேம்பாரை சேர்ந்த அந்தோணி ஜெனிட் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். அந்தோணி ஜெனிட்டிற்கும் இது 2வது திருமணமாகும். பின்னர் இவர்கள், தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த பெண் கமாண்டோ பயிற்சி முகாமில் பங்கேற்ற ஹரிப்பிரியாவுக்கும், மற்றொரு பெண் காவலரான நவநீதப் பிரியா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவநீதப்பிரியா பெண்ணாக இருந்து மருத்துவ சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர். இதன் காரணமாக ஹரிப்பிரியாவிற்கும், நவநீதப் பிரியாவிற்கும் தன் பாலின சேர்க்கை பழக்கம் உருவாகி உள்ளது. அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹரிப்பிரியா விடுமுறை எடுத்துக் கொண்டு தனது கணவரிடம் சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வதாக கூறி சென்றுள்ளார். ஹரிப்பிரியா நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்தோணி ஜெனிட், அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஹரிப்பிரியா, கணவரிடம் கோவில்பட்டியில் இருப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்தோணி ஜெனிட், ஹரிப்பிரியாவின் குடும்பத்தினருடன் சென்னை சென்று அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் ஹரிப்பிரியாவை காணவில்லை என்று புகார் அளித்தார்.
காவல்துறையினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டதில், ஹரிப்பிரியா புதுச்சேரியில் நவநீதப்பிரியாவுடன் இருப்பது தெரியவந்தது. புதுச்சேரி அருகே திண்டிவனத்தில் நவநீதப்பிரியாவுடன் பஸ்சில் வந்த ஹரிப்பிரியாவை அந்தோணி ஜெனிட் மற்றும் உறவினர்கள் மீட்டு தூத்துக்குடிக்கு கடந்த 22ம் தேதி அழைத்து வந்துள்ளனர். வழியில் தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே உள்ள கசங்காத்த பெருமாள் கோயிலில் வழிபட்டுள்ளனர். அப்போது ஹரிப்பிரியா தப்பியோடி லாரியில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் அந்தோணி ஜெனிட் உள்ளறையில் படுத்திருந்தபோது, வெளியே உள்ள அறையில் ஹரிப்பிரியா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த தென்பாகம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணாக மாறிய பெண் நண்பரிடம் பிரித்ததால் மற்றொரு பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.