செங்கல்பட்டு: நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். சேலையூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் காதர் பாஷா. இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு காதர் பாஷா தனது வீட்டில் சண்டை போட்டுவிட்டு, ராஜேஷ் வீட்டில் தங்கி வந்தார். காதர் பாட்ஷா மீது, அதிக அளவிலான வழக்குகள் உள்ளதால் அடிக்கடி அவரை தேடி போலீசார் ராஜேஷ் வீட்டிற்கு வந்து உள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள், காதர் பாஷாவிடம், ‘‘இனிமேல் எங்கள் வீட்டிற்கு வரக்கூடாது,’’ என அவரை கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காதர் பாஷா ராஜேஷ் தூங்கும்போது, அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று குற்றவாளியான காதர் பாட்ஷாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.