Sunday, June 2, 2024
Home » பொரித்த கோழி… தொக்கு பிரியாணி…

பொரித்த கோழி… தொக்கு பிரியாணி…

by Lavanya

உணவகத்தொழில் என்பது மிகவும் சென்சிட்டிவ்வானது. தரத்தையும், சுவையையும் கொடுத்தால் மட்டுமே அதில் நிலைத்து நிற்க முடியும். இதனால் அனுபவம் வாய்ந்தவர்களே இதில் கோலோச்ச முடியும். பல தலைமுறையாக உணவகங்கள் நடத்துபவர்கள், அப்படியே அவர்களின் மாஸ்டர்கள், தொழிலாளர்களின் துணையோடு தங்களது வாரிசுகளுக்கு கையளிப்பார்கள். புதிதாக வருபவர்கள் வேறெந்த ஓட்டலிலாவது பணிபுரிந்துவிட்டு, அல்லது முறைப்படி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ரெஸ்டாரெண்ட் நடத்துவார்கள். ஆனால் ரேடியோ ஜாக்கியாக இருந்த பெண் ஒருவர் உணவகம் தொடங்கவேண்டும் என்ற ஆர்வத்தில், பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் உணவகத்தைத் தொடங்கி வெற்றி வாகை சூடி வருகிறார். சென்னை கோபாலபுரம் புதுப்பேட்டை முதல் தெருவில் கை மணம் என்ற உணவகத்தைத் தொடங்கி நடத்தி வரும் விஷ்ணுபிரியாதான் அந்த நம்பிக்கைப் பெண். ஒரு மதிய வேளையில் விஷ்ணுபிரியாவைச் சந்தித்தோம்.

“ நான் ரேடியோ ஜாக்கியாக பல வருடங்கள் வேலை பார்த்தேன். அதே நேரத்தில் புதிதாக ஏதாவது சொந்தமாக தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது எட்டிப்பார்த்தது. அந்த ஆசைதான் இந்த உணவகத்தை தொடங்க வைத்திருக்கிறது’’ என பேசத் தொடங்கினார்’’ விஷ்ணுபிரியா…ஆர்.ஜே. வேலை அனைவருக்கும் பிடித்தமான வேலை. எனக்கும் அப்படித்தான். ஆனால் நாம் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கு உணவகத்தொழில் நல்ல சாய்ஸ் என நினைத்து இந்த துறைக்கு வந்தேன். உணவகம் தொடங்கலாமென முடிவெடுத்ததைத் தொடர்ந்து நான் முதலில் தொடங்கியது கிளவுடு கிச்சன்தான். ஆரம்பத்தில் உணவுகளை ஒரே இடத்தில் சமைத்து, அவற்றை ஆன்லைனில் மட்டும் டெலிவரி செய்து வந்தேன். 2020ல் தான் கிளவுடு கிச்சனைத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அப்போது கொரோனா தொற்று பரவிய காலமாக இருந்தது. அந்த இக்கட்டான சூழலிலும் கூட கிளவுடு கிச்சனில் உணவுகளைத் தயார் செய்து டெலிவரி கொடுத்து வந்தேன்.

பல வீடுகளில் சமைக்க முடியாத நிலை இருந்தபோதும் அவர்களுக்கு எங்கள் கிளவுடு கிச்சனில் இருந்து உணவு சென்றபடி இருந்தது. அந்த நேரத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டுமென நினைத்து மிளகும், சீரகமும் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட ரசம் சாதத்தைக் கொடுத்து வந்தோம். அந்த ரசம் சாதத்தை பலரும் மருத்துவமனையில் இருந்த படியே ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தனர். மருத்துவர்கள் அறிவுறுத்திய ரசம் சாதம், முட்டை, சூப் என அனைத்தையும் நாங்கள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்தோம். அனைத்துக்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனால் இந்த ரசம் சாதம் காம்போ இன்று வரையிலும் எங்களது உணவகத்தின் ஸ்பெஷலாக இருக்கிறது.கிளவுடு கிச்சனாக இருந்ததை கை மணம் ரெஸ்டாரெண்ட் என்ற பெயரில் மாற்றி விரிவுபடுத்தி இருக்கிறோம். இதில் இன்னும் பல வெரைட்டியான உணவுகளைக் கொடுத்து வருகிறோம். நமது உணவகத்தில் செட்டிநாடு உணவுகள், சைனீஸ் உணவுகள், அரேபியன் ஃபுட்ஸ் என அனைத்தும் கொடுக்கிறோம். காலை 11:30க்கு தொடங்குகிற உணவகம் இரவு 12 மணி வரை செயல்படுகிறது. மதியம் மீல்ஸ், பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் தருகிறோம்.

சிக்கன், மட்டனில் பல வெரைட்டியான சைட் டிஷ்கள், கடல் உணவுகள் என பலவும் கிடைக்கிறது. மீல்ஸிற்கு இரண்டு வகையான கூட்டுகள், மூன்று வகையான அசைவக் குழம்புகள், இரண்டு வகையான சைவக் குழம்புகள் என அனைத்துமே இருக்கிறது. எங்கள் உணவகத்தில் 99 ரூபாய்க்கு அசைவ மீல்ஸ் கொடுத்து வருகிறோம். அதேபோல சைவத்திலும் பல வகையான உணவுகள் கொடுத்து வருகிறோம். மினிமீல்ஸ் எங்கள் கடையின் மற்றொரு ஸ்பெஷல். ஒரு சப்பாத்தி, ஆம்லேட், குலோப் ஜாமூன் ஆகியவற்றோடு மூன்று வகையான ரைஸ் வைத்து கொடுக்கிறோம். இந்த மினிமீல்ஸையும் 99 ரூபாய்க்கு தருகிறோம். எங்கள் உணவகத்தில் இருக்கிற அனைத்து வகையான உணவுகளுமே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். ஏனென்றால் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்கு சென்றால் நான் என்னவெல்லாம் இருக்க வேண்டுமென்று நினைப்பேனோ, அவை அனைத்தையும் எங்களது கடையில் கொடுத்து வருகிறோம். அதேபோல, மதுரையில் கிடைக்கும் பல காரசாரமான சைடிஷ்களையும் எனது உணவகத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். இங்கு சமைக்கப்படுகிற உணவுகள் அனைத்தும் எந்த அளவிற்கு சுவையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அதேபோல ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென நினைப்பேன்.

அதனால், காய்கறிகளில் இருந்து அசைவ அயிட்டங்கள் வரை அனைத்தையும் நானே நேரில் சென்று வாங்குகிறேன். மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகள் அனைத்தையும் நேரடியாக மீனவர்களிடம் இருந்தே வாங்குகிறேன். கடைக்குத் தேவையான மசாலாக்களைக் கூட எனது அம்மா, சித்தி ஆகியோரின் வழிகாட்டலோடு நானே தயாரிக்கிறேன். முழுக்க முழுக்க வீட்டுச் சாப்பாடு முறையில் சமைக்கிறோம். சமைக்கப்படும்போது எந்த உணவுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினால் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமோ அதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறோம். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் என அனைத்தையுமே பயன்படுத்துகிறேன். கைமணம் ஸ்பெஷல் உணவுகள் என பல வெரைட்டி டிஷ்கள் நமது உணவகத்தில் மட்டுமே கிடைக்கும் வகையில் தருகிறோம். அதில் செட்டிநாடு சிக்கன் ஃப்ரைடு ரைஸ், பொரிச்ச கோழி ஆகியவை நமது உணவகத்தின் வெரி ஸ்பெஷல் டிஷ். அதாவது, ஃப்ரைடு ரைசில் நமது ஊர் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டு செட்டிநாடு ரைசாக கொடுத்து வருகிறோம். அதேபோல, பொரித்த கோழியும் வீட்டு மசாலா சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சைவத்தில் மஸ்ரூம், பனீர், கோபி என அனைத்திலுமே ஃப்ரைடு ரைஸ் கொடுக்கிறோம்.

அதுபோக, சிக்கன் கபாப், சிக்கன் தந்தூரி, சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜ் சூப் என பல வெரைட்டிகள் இருக்கிறது. மட்டனில் மட்டன் தலைக்கறி, மட்டன் சுக்கா, மட்டன் குடல் என அனைத்தும் இருக்கிறது. எங்கள் கடையில் மதியமே கறிதோசை பரோட்டா என அனைத்தும் கிடைக்கிறது. கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் என்ன சாப்பிட வேண்டுமென நினைக்கிறார்களோ அதை நாங்கள் கொடுக்க வேண்டும். அதனால் மீல்ஸைத் தவிர மதியம் கிடைக்கிற உணவுகள் அனைத்துமே இரவும் கிடைக்கிறது. நமது கடையில் பிரியாணியில் பல வெரைட்டிகள் இருக்கிறது. சிக்கன், மட்டன், இறால் என அனைத்திலும் பிரியாணி இருக்கிறது. அதுவும் தொக்கு பிரியாணி கூட கொடுத்து வருகிறோம். இந்த உணவகம் தொடங்கும்போது எனக்கு மூன்று குழந்தைகள். அவர்களைக் கவனித்துக் கொண்டே இந்த உணவகத்தை தனி ஆளாக நடத்தி வந்திருக்கிறேன். உணவுத்தொழிலைப் பொருத்தவரை பல வகையான பிரச்னைகளை சமாளித்து வர வேண்டும். அதே நேரத்தில் நமது உணவகத்தை நம்பி சாப்பிட வரும் வாடிக்கையாளர்களையும் கவனிக்க வேண்டும். உண்மையான உழைப்பு இருந்தால் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்து சாதிக்க முடியும். அதற்கு நானே சாட்சி’’ எனக் கூறி புன்னகைக்கிறார் விஷ்ணுபிரியா.

– ச.விவேக்
படங்கள்: ஆர்.வின்சென்ட் பால்

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi