பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர் – சம்பா மாவட்ட எல்லைக்கு உட்பட்ட அகல்தாரா அருகே, பிலாஸ்பூரில் இருந்து ராய்கர் நோக்கி சென்ற சரக்கு ரயிலின் சில பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. பிலாஸ்பூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். இந்த விபத்தால் பிலாஸ்பூர்-ராய்கர் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் இயக்கம் முற்றிலும் ஸ்தம்பித்தது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்ற ரயில்களின் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி சந்தோஷ் குமார் கூறுகையில், ‘அகல்தாரா கிழக்கு கேபின் அருகே சரக்கு ரயில் வந்தவுடன், அந்த ரயிலின் 9 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த ரயில் விபத்து காரணமாக 13 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் இந்த ரயில்கள் அனைத்தும் பல்வேறு நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில் பாதையை சீரமைத்த பின்னர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.