சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக் கழகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆய்வறிஞர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள், தங்களின் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் வசித்த சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். அதன் பேரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வறிஞர்கள் வழிகாட்டிகள் மற்றும் 16 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை, ஆளுநர் நேற்று சந்தித்து. அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல்கலைக் கழகங்கள் மூலம் தமிழ்நாட்டில் 90 சுதந்திரப் போராட்ட வீரர்கள் இதுவரை பாராட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களையும் ஆளுநர் ஆய்வு செய்தார். அப்போது, மாநில ஆவணக் காப்பகங்கள், தேசிய ஆவணக் காப்பகங்கள், இந்த விஷயத்தில் மேலதிக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு கூடுதல் தகவல்களை சேகரிக்க வேண்டும். மேலும் சுதந்திர போராட்டத்தில் அவர்களது பங்களிப்பு பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக் கொண்டார். அந்த தியாகிகளின் வரலாறும் வாழ்வும் உரிய முறையில் இந்திய கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார். இந்த கலந்துரையாடலில், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ், சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் நாகசுப்பிரமணி உள்பட 16 பல்கலைக் கழக துணை வேந்தர்கள் பங்கேற்றனர்.