சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் நினைவுகூரத் தவறியதாக ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளதார். அவருக்கு தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. பல்கலைக்கழக சட்ட விதியின் படி ஆட்சிப் பேரவைக் குழு நிறைவேற்றினால் ஒருவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடியும். ஆனால் அதற்கு வேந்தரின் கையெழுத்தும் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே இந்த இரண்டு அவையிலும் எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் இது. தியாகி சங்கரய்யா தனது இளமைக் காலத்தில் கல்லூரிப் படிப்பையே தியாகம் செய்துவிட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இரண்டு ஆண்டுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் தலைமறைவாக இருந்தார். அப்படி எல்லாம் நமது சுதந்திரத்துக்கு போராடியவர் என்ற அடிப்படையில் அவருக்கு, மதுரை பல்கலைக் கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு எடுக்கப்பட்டதை மதி்க்காமல் ஆளுநர் பேசியுள்ளார்.
உண்மையிலேயே தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீதும், போராடியவர்கள் மீதும் அக்கறை இருக்குமானால் முதலில் அவர், இதற்குப் பிறகாவது அனுமதி அளிக்க வேண்டும். வரும் நவம்பர் 2ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்க இருப்பதால் அதற்கு முன்பாக ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், தமிழக முதல்வரால் தமிழக அரசும் சங்கரய்யாவுக்கு தகைசால் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கு பிறகாவது ஆளுநர் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதிக்க வேண்டும். சமூக நீதிக்காகவும், பொருளாதார சமத்துவத்துக்காகவும் தொடர்ந்து போராடி 100 வயதை எட்டிய அவருக்கு ஆளுநர் அனுமதி கோப்பில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.