சென்னை: பிறவியிலேயே காது கேட்கும் திறன் இல்லாத 10 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் டி.வி. 96 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பிறவியிலேயே காது கேட்கும் திறன் இழந்த ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் டி.வி. 96 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, சென்னையில் உள்ள மெட்ராஸ் காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், செயல் இயக்குநர் இந்திரா காமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 10 குழந்தைகள் பயனடைவார்கள். மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனை மூலம் சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் செயல்படுத்தி வரும் திட்டங்களின் மூலம் இதுவரை 71 பேருககு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.