திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், குத்தபாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான தேசிங்கு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் மாரிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் சுகுமார், கந்தன், பிரதீப் மற்றும் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ வும் திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 40 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்று சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பள்ளியை மேலும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தி வருவதால் வருங்காலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக கருதப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் துணைத் தலைவர் உஷா நந்தினி வரதராஜன், திமுக நிர்வாகிகள உதயா, பாலு, துரை, கார்த்தி, மனோஜ், அருண் குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அருண்குமார், இந்துமதி ஸ்ரீதர், யுவராணி செந்தில், தணிகாச்சலம், லோகு, கருணாகரன், ஊராட்சி செயலாளர் முனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.