சென்னை: 420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசியதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசுகிறார்கள் என்றும், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதாக கூறும் கட்சிகள் திமிர்த்தனமானவை என்றும் அவர் கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும், 400 இடங்களுக்கு மேல் வெற்றி வருகிறது என்றால் மோசடி மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டும் இன்றி அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.