சென்னை: டெக்ஸ்டைல், ஆட்டோ மொபைல் என பெரும் தொழில்களை பதம்பார்த்த ஜி.எஸ்.டி வரி சாலையோரம் ஊசி பாசி மணி விற்கும் நரிக்குறவர்களையும் விட்டுவைக்கவில்லை ஜி.எஸ்.டி வரி இவர்களின் வாழ்க்கையை எப்படி இருளில் தள்ளி விடுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றனர். கம்பி, மணிகள் உள்ளிட்ட பொருட்களை மொத விலைக்கு வாங்கி வந்து குடும்பமாக சேர்ந்து நாள் முழுவதும் மணிகளை கோர்த்து அவற்றை விற்பதே இவர்களின் ஒரே வாழ்வாதாரம்.
உடல் உழைப்பை முதன்மையான முதலீடாக கொண்ட இவர்களின் வாழ்கைஇணையும் ஜி.எஸ்.டி வரி பாதித்துள்ளது. ஜி.எஸ்.டி அமலுக்கு பிறகு கம்பி மணிகள் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததே இதற்கு காரணம் என்கின்றனர் நரிக்குறவர்கள். ஊசி, பாசி மணிகளை சாலையோரம் விற்றால் அவற்றிற்கு ஜி.எஸ்.டி வரி பிடித்தம் செய்வது கிடையாது ஆனால் சாலையோர வியாபாரம் முன்பைப்போல இல்லாததால் வியாபாரியிடம் மொத்த விலைக்கு மணிகளை விற்க தொடங்கியுள்ளனர்.
இதில் நரிக்குறவர்களுக்கு ஓரளவில் லாபம் கிடைத்து வந்துள்ளது. ஆனால் ஜி.எஸ்.டி வரி அமலான பிறகு இவர்கள் செய்து தரும் கிரிஸ்டல் அணிகலன், மெட்டல் அணிகலன், பேன்சி ஆபரணங்கள் என ரங்கங்களுக்கு ஏற்ப ஜி.எஸ்.டி வரியை வியாபாரிகள் பிடித்தம் செய்து கொண்டே பணம் கொடுக்கின்றனர். இதனால் மூல பொருட்களுக்கான விலை கூலி போக கைக்கு ஒன்றும் கிடைப்பதில்லை என்று நரிக்குறவர்கள் குமுறுகின்றனர்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு ஒரு பக்கம் என்றால் செய்து கொடுக்கும் ஊசி பாசி மணிகளுக்கும் ஜி.எஸ்.டி வரி பிடித்தம் செய்தால் வாழ்க்கையை நடத்துவது எப்படி என நரிக்குறவர்கள் கேட்கின்றனர். ஜி.எஸ்.டி வரியால் தங்கள் வாழ்கை இருளில் தள்ளப்பட்டு விட்டதாக கவலையும் தெரிவிக்கின்றனர். ஜி.எஸ்.டி வரியால் மாநிலம் முழுவதும் வாழும் 5 லட்சம் நரிக்குறவர் குடும்பங்கள் ஆட்டம் கண்டிருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக ஊசி, பாசி மணிகளை விற்று வரும் தங்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.