சென்னை: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனுக்கு பாஜக-வினர் மிரட்டல் விடுத்திருப்பதற்கு பல்வேறு முற்போக்கு இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் ‘தமிழ்நாடு பொதுமேடை 2024’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அவர் எழுதியுள்ள “நீதித் துறையை நிலைகுலையச் செய்யும் பாஜக அரசு” என்ற கட்டுரை ஒரு இணைய இதழில் வெளியானதுடன், சிறு நூலாகவும் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து பாஜக சார்பில், காவல்துறைக்கும் என்ஐஏ-வுக்கு புகார் செய்து, முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் அவரது அமைப்பை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முற்போக்கு இயக்கங்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் வாக்குப் பதிவு நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் களத்தில் கருத்து போராட்டங்கள் நிகழ்வதை தடுத்து கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் முயற்சி என தெரிவித்துள்ளனர்.