டெல்லி: ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டில் ரூ.20,000 கோடி அளவிற்கு போலி ஆவணங்கள் மூலமாக நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி-ஐ செலுத்தும்போது மூலப்பொருளுக்கு செலுத்திய ஜி.எஸ்.டி.க்கான ஆவணங்களை சமர்ப்பித்து மீதியை மட்டும் கட்டினால் போதும். இது உள்ளிட்ட வரி என்று அழைக்கப்படுகிறது.
இந்த உள்ளிட்டு வரியை செலுத்தியதாக போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் ஜனவரி வரையிலான காலத்தில் மட்டும் 1,999 நிறுவனங்கள் ரூ.19,690 கோடி அளவிற்கு போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குஜராத், மேற்கு வங்கம், ஹரியானா, அசாம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி மாநிலங்களில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டில் நடந்த ரூ.13,175 கோடி வரி ஏய்ப்பை விட 50% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.