பெங்களூரு: பெங்களூருவில் பைஜுஸ் நிறுவனத்தின் சிஇஓ ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எட்டெக் நிறுவனம் பைஜுஸ். இதன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருப்பவர் ரவீந்திரன் பைஜு. இந்நிறுவனம், 2011ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ரூ.28,000 கோடி அந்நிய நேரடி முதலீடு பெற்றதில் விதிமீறல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், 2020-21ம் ஆண்டிலிருந்தே நிதி விவரங்கள், கணக்குகளை பைஜூஸ் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை, அதை தணிக்கையும் செய்யவில்லை என்று அமலாக்கத்துறை புகார் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, பைஜூஸ் சிஇஓ ரவீந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், ரவீந்திரன் பைஜுவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.