சத்தியமங்கலம்: தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் புகுந்து சாலையை கடந்து சென்ற காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இதற்கிடையே நேற்று தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தை ஒட்டியுள்ள கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து விவசாய விளை நிலங்களில் நடமாடின. காட்டு யானைகள் கூட்டத்தை கண்டு அச்சமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சத்தம் போட்டு யானைகளை விரட்டி அடித்தனர். அப்போது காட்டு யானைகள் மானாவாரி நிலங்கள் வழியாக சாலையை கடந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றன. காலை நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து நடமாடியதால் தாளவாடி மலை பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
ஊருக்குள் நடமாடும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.