இந்தப் பெயரைக் கேட்டாலே, இது ஏதோ ஐலேசா போல ஒரு வார்த்தை என்று தோன்றும். ஆனால் இது ஒரு டேஸ்ட்டியான டிஷ். பார்ப்பதற்கு பாயாசம் போல இருக்கும். சாப்பிட்டுப் பார்த்தால் இனிப்பாக, புதிய சுவையில் இருக்கும். மோலேசா என்பது பர்மாவில் கிடைக்கக்கூடிய ஒரு டிஷ். அரிசி மாவை வெந்நீரில் பிசைந்து, அதனை சின்னச் சின்னதாக நூடுல்ஸ் மாதிரி உருட்டி ஒரு டம்ளரில் போட்டு அதன்மேல் சூடான வெல்லப்பாகை ஊற்றுவார்கள். பின்பு, தேங்காய்ப்பாலை ஃபிரிட்ஜுக்குள் வைத்து சிறிதுநேரம் கழித்து எடுத்து டம்ளரில் இருக்கிற அரிசி மாவு, நூடுல்ஸ் மற்றும் வெல்லப்பாகு மேல் இந்தக் குளிர்ச்சியான தேங்காய்ப்பாலை ஊற்றிக் குடித்தால் சுவை அள்ளும். இந்த மோலேசா இப்போது வடசென்னையில் வியாசர்பாடி பகுதியில் கிடைப்பதால் உணவுப்பிரியர்கள் இந்த டிஷ்சை சாப்பிட்டுப் பார்க்கலாம்.
ரங்கோலி ஆப்பம்
ஆப்பம் என்றால் தெரியும். அது என்ன ரங்கோலி ஆப்பம். சாதாரணமாக தயார் செய்கிற ஆப்பத்தின் மேல் கேரட், பீன்ஸ் போன்று மேலும் சில காய்கறிகளைத் தூவி கலர்ஃபுல்லாக கொடுப்பார்கள். சாதாரணமாக ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால் நன்றாக இருக்கும்தான். என்றாலும், இந்த ரங்கோலி ஆப்பத்திற்கு வடகறி வைத்து சாப்பிட்டால் சுவை புதிதாக இருக்கும். இந்த ரங்கோலி ஆப்பத்தை சாப்பிட வேண்டுமென்றால் துரைப்பாக்கத்தில் இருக்கிற இட்லி வடை சாம்பார் என்கிற உணவகம் பெஸ்ட் சாய்ஸ்.
பர்ப்பிள் டீ
நம்மில் பலர் டீ பிரியர்கள்தான். காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாள் சபிக்கப்பட்ட நாள் போல் இருக்கும். அந்தளவிற்கு நாம் டீக்கு அடிக்ட் ஆகி இருக்கிறோம். டீயில் பல வகையான வெரைட்டிகள் உள்ளன. ஆனால், இப்போது சென்னையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டீ எதுவெனக் கேட்டால் அது பர்ப்பிள் டீ என்ற பதில்தான் வரும். சங்குப்பூவை நன்றாக கொதிக்க வைத்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கொடுப்பார்கள். குடிப்பதற்கு இதமாகவும், பார்ப்பதற்கு புது நிறத்திலும் இருக்கும். இந்த பர்பிள் டீ அண்ணா நகரில் கிடைக்கிறது.