ராமேஸ்வரம்: மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசிக்க வரும் 21ம் தேதி தமிழக முதல்வரை இலங்கை அமைச்சர் சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசியதாவது: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதா, இந்தியாவுக்கு சொந்தமானதா என்கிற வாதங்கள் தொடர்ந்து எழுகின்றன. இந்தியாவில் இருப்பவர்கள் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தம் எனவும், இலங்கையில் இருப்பவர்கள் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் எனவும் தமது வாதங்களை முன்வைத்து கோஷங்கள் எழுவது வழக்கமாக உள்ளது. கச்சத்தீவைத் திருப்பிக் கொடுப்பதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.
ஒருவேளை கச்சதீவைக் கொடுத்தாலும் கூட கச்சத்தீவில் இருந்து ஒரு கிமீ தூரம் வரை உள்ளே சென்று, மீன்களைப் பிடிக்க முடியுமே தவிர எங்களுடைய நாட்டுக் கரைக்கு வந்து அவர்கள் மீன் பிடிக்க முடியாது. இந்திய – இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தமிழகம், புதுச்சேரி முதலமைச்சர்கள் என்னை தொடர்பு கொண்டனர். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு இந்த பிரச்னை குறித்து பேச உள்ளேன். இவ்வாறு கூறினார். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று வந்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் மத்தியில் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரும் 21ம் தேதி முதல்வரை சந்தித்து இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காணும் வழிகள் குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவித்தார்.