ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15ம் தேதி, ராமேஸ்வரம் அருகே பாம்பன் அக்காள்மடம் பகுதி மீனவர்கள் ராஜ், பிரான்சிஸ் கேஸியருக்கு சொந்தமான நாட்டுப்படகுகளில் 22 மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
தங்குகடல் மீன் பிடித்தலுக்காக சென்ற பாம்பன் பகுதியை சேர்ந்த துர்க்கேஸ்வரன், பாண்டி, பாபு, பஞ்சவர்ணம், முனியசாமி, சீமோன், வடிவேல், அஜித் குமார், ரோஜன், டிப்பிஜான், பெவின்ராஜ், அந்தோணிராஜ், சிவசக்தி உட்பட 22 மீனவர்களையும் நேற்று இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். 2 நாட்டுப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவரும் இலங்கை யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கடற்படை உயரதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 22 பேரும் யாழ்ப்பாணம் கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர். கடந்த அக்.14 மற்றும் 28ம் தேதிகளில் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இன்னும் தமிழகத்திற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் மீண்டும் 22 மீனவர்களை சிறை பிடித்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.