Tuesday, May 21, 2024
Home » எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை: மேலும் ஒரு மீனவருக்கு சிறை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை: மேலும் ஒரு மீனவருக்கு சிறை

by Lavanya

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்திய எல்லைப்பகுதியான கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 19 தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மீனவர்கள் சிறையிலடைக்கப்பட்ட நிலையில் 19 மீனவர்கள் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதிகள் 18 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்த நிலையில் மேலும் ஒரு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ஏற்கனவே தமிழக மீனவர்கள் 4 பேரில் 2 பேருக்கு 6 மாத சிறை தண்டனையும். ஒருவருக்கு 1 வருட சிறை தண்டனையும் மற்றொரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. இதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்து வருகிறது.
மேலும் மீனவர்களையும், படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் பேரணியாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றிருக்கும் போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர், ஊராட்சி அலுவலகத்தில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் போராட்டத்தை கைவிடுமாறும், இனிவரும் காலங்களில் மீனவர்களுக்கு இது போன்ற தண்டனைகள் வழங்கப்படாது. மேலும் ஒரு வார காலத்திற்குள் சிறையிலுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர் ஒருவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். அதே போல இலங்கை வசமுள்ள படகையும், மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு நாளை நடைபெற இருக்கின்ற கச்சத்தீவு திருவிழாவையும் மீனவர்கள் புறக்கணித்த நிலையில் மேலும் ஒரு தமிழக மீனவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களுக்கிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

ten + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi