Friday, May 10, 2024
Home » மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.134.29 கோடியில் புதிய கட்டிடங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.134.29 கோடியில் புதிய கட்டிடங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

by Nithya

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.134.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.11.65 கோடி செலவிலான கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 134 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 புதிய மீன் இறங்குதளங்கள் மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 11 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம், நிருவாகம் மற்றும் கல்வித் தொகுதியின் கூடுதல் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல், மீன் உற்பத்தியை அதிகரித்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட அரசு செயல்படுத்தி வருகிறது.

கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்களை திறந்து வைத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் மற்றும் தங்கச்சிமடம் கிராமத்தில் 8 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளம், கன்னியாகுமரி மாவட்டம், கீழமணக்குடி கிராமத்தில் 29 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளம், செங்கல்பட்டு மாவட்டம், பழையநடுக்குப்பம் மற்றும் புதுநடுக்குப்பம் ஆகிய கிராமங்களில் தலா 11 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்கள் மற்றும் கோவளம் கிழக்கு கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம்;

கடலூர் மாவட்டம், தாழங்குடா கிராமத்தில் 13 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளம், தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பார் கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், மயிலாடுதுறை மாவட்டம், சின்னமேடு கிராமத்தில் 9 கோடியே 78 இலட்சம் ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் மற்றும் வானகிரி கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளம், என மொத்தம் 134 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மீன் இறங்குதளங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட 4 மீன் இறங்குதளங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தல்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மாணவர்களுக்கான 29 தங்கும் அறைகள், பொழுதுபோக்கு அறை, ஓய்வறை, உடற்பயிற்சிகூடம், வாசகர் அறை, விடுதி பாதுகாவலர் அறை உள்ளிட்ட வசதிகளுடன், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 7 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம்; நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், முதல்வர் அலுவலக அறை, ஆய்வகம், ஆசிரியர் கலந்துரையாடல் அறை, வாசகர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கல்லூரியின் இரண்டாம் தளத்தில் கட்டப்பட்டுள்ள நிருவாகம் மற்றும் கல்வித் தொகுதியின் கூடுதல் கட்டடம்; என மொத்தம் 11 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி, இ.ஆ.ப., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் என்.பெலிக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இராமநாதபுரத்திலிருநது காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

seventeen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi