சென்னை: சென்னை, ஐஐடியின் 64-வது நிறுவன நாள் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டார். கடந்த ஆண்டு சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி பேராசிரியர் எம்.எஸ்.சிவகுமார் எழுதிய முன்னேற்ற பாதைகள் உட்பட 3 புத்தகங்களை ஐஐடி இயக்குநர் காமகோடி வெளியிட, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பெற்றுக் கொண்டார். சென்னை ஐஐடியின் வாழ்நாள் சாதனை ஆராய்ச்சி விருது விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் ஆர்.ஐ.சுஜித்துக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில்: சென்னை ஐஐடி வளாகத்தில் ஆசியாவின் முதல் 500 மீட்டர் சோதனைப் பாதையை அமைக்கும் நோக்கத்துடன் ‘ஹைப்பர்லூப்’ என்ற திட்டத்தில் 72 மாணவர்களைக் கொண்ட குழு பணியாற்றி வருகிறது என்று கூறினார்.