விருதுநகர்: பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தார். விருதுநகர் அருகே வி.ராமலிங்காபுரத்தில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. 56 அறைகள் கொண்ட இந்த ஆலையில் தரை சக்கரம் தயாரிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் ஆலையில் 103 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்னலுடன் மழை பெய்தது. எனவே, தொழிலாளர்கள் பட்டாசுகளை ஒதுக்கும் பணியில் ஈடுபட்டனர். திடீரென பட்டாசு தயாரிப்பு அறையில் மின்னல் தாக்கியது.
இதில் பணியில் இருந்த வில்லூரை சேர்ந்த புஷ்பா (52), மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பட்டாசு தயாரிக்கும் அறையின் உள்பகுதியும் சேதமடைந்தது. சம்பவ இடத்தை மின்னல் தாக்கியதா என தடயவியல் பிரிவு அதிகாரிகள் பரிசோதித்தனர். விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.