திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்போரூர் புறவழிச்சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்ட வளம் மீட்பு பூங்கா உள்ளது. இதையொட்டி, குப்பை கிடங்கு உள்ளது. வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு, பின்னர் அவற்றில் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகின்றன.
இப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கிடங்கில் இருந்த குப்பை முழுவதும் பரவியது. இதன் காரணமாக 100 அடி உயரத்திற்கு புகை மூட்டம் ஏற்பட்டு, ஓஎம்ஆர் புறவழிச்சாலை முழுவதும் மறைத்துக்கொண்டது.
இதையடுத்து, புறவழிச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பழைய சாலையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சிறுசேரி மற்றும் திருப்போரூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 2 வாகனங்கள் வந்து சிறுசேரி தீயணைப்பு அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.