திருவொற்றியூர்: காசிமேட்டில் விசைப்படகுகள் பழுதுபார்க்கும் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு சொந்தமான இடத்தில், விசைப்படகுகள் பழுதுபார்க்கும் தளம் உள்ளது. இங்கு பழைய விசைப்படகுகளின் கழிவுகள் மற்றும் படகுகளின் தேவையற்ற உதிரி பாகங்கள் கொட்டி வைக்கப்படுவது வழக்கம். இந்த இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளின் உதிரி பாகங்களில் நேற்று தீவிபத்து ஏற்பட்டு, கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதை பார்த்து அதிச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக தீயணைப்பு நிலையம் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டையில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் காசிமேடு துறைமுகத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு அதிகாரி பரமேஸ்வரன் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து, வெயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூகவிரோதிகள் யாரேனும் தீவைத்து எரித்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.