டெல்லி: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து செய்தியை வெளியிட்டு வருகின்றனர். விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கங்களிலும் காலைக் காட்சி ரத்து செய்யப்படுவதாக திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,
விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களைக் கவர்ந்தது. பொது சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அது நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
ராகுல் காந்தி இரங்கல்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலகம், அரசியலில் விஜயகாந்தின் பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தார், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.