Saturday, July 27, 2024
Home » வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு: சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? கண்டறியும் பணியில் போலீஸ் தீவிரம்

வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு: சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? கண்டறியும் பணியில் போலீஸ் தீவிரம்

by Mahaprabhu

சென்னை: சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகரில் வடசென்னை, மத்திய சென்னை, ெதன் சென்னை என 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது இன்று மாலை 3 மணியுடன் முடிகிறது. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால், ெஜயராமன் உள்ளிட்ட சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொத்தம் உள்ள 3,726 வாக்குச்சாவடிகளில், சுமூகமான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி, தற்போது சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் அலுவலர்களுடன் இணைந்து கடந்த ஒருவாரமாக கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் ஜெயராமன் தலைமையிலான போலீசார் பதற்றம் மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் ஓரிரு நாளில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேகரம், வட சென்னையில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் நேற்று முன்தினம் மூலக்கொத்தளத்தில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலின் போது, யார் முதலில் வேட்பு மனு தாக்கல் ெசய்வது என்பதில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. இது 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய பாஜ வேட்பாளருடன் வந்தவர்கள் திமுக மற்றும் அதிமுகவினரிடம் எவ்வளவு நேரம் நாங்கள் காத்திருப்பது என்று கடும் வாய்த்தகராறு செய்தனர். இதனால் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதேநேரம் மூலக்கொத்தளம் பகுதிகளில் 3 கட்சிகளின் தொண்டர்களும் ஒன்று கூடியதால் கடைகள் மூடப்பட்டன. மோதலை தடுக்க அதிக எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டது. எனவே, வேட்பு மனு தாக்கலின்போதே 3 கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், எப்போதும் இல்லாத வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில், வடசென்னை தொகுதியில் அதிகளவில் பிரச்னைகள் நடைபெறும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது 3 தொகுதிகளிலும் 330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 157 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த முறை உளவுத்துறை தகவலின்படி, வடசென்னை மற்றும் தென் சென்னையில் அதிகளவில் பிரச்னைகள் நடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் ஜெயராமன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் அலுவலர்களுடன் இணைந்து பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கணக்கெடுத்து வருகின்றனர். இப்பணிகள் இந்த வார இறுதியில் முடியும் என்றும், அதன் பிறகு 3 நாடாளுமன்ற தொகுதிகளில் பதற்றமான மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் அறிவிக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் உதவியுடன் கொடி அணிவகுப்பு நடத்தி உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

ten − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi